Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

எனது நாடு ! எனது மொழி ! எனது மக்கள் !



எனது நாடு ! எனது மொழி ! எனது மக்கள் !

ஸௌராஷ்ட்ர தேசம்,மொழி,மக்களைப் பற்றிய தன் அனுபவத்தை கூறுகிறார் ஸ்ரீமான் ராஜேந்திர மார்கண்டே - பம்பாய்.



தாய்த் திருநாடான பாரதத்தில் பிறந்திட்ட நான் பலமுறை பிறந்த நாட்டினையும்,பேசும் மொழியினையும்,என்னைச் சார்ந்த ஸெளராஷ்ட்ர மக்களையும் நினைப்பதுண்டு. எனது நாடு எது? எனது மொழி எது? எனது மக்கள் யார்? என்று மணிக்கணக்கில், நாட்கணக்கில் சலிப்படையாமல் யோசிப்பதுண்டு. பரந்த மனப்பான்மையுடன் விடைகாண விளைந்தால் எனக்குக் கிடைக்கும் பதில், "எனது நாடு பாரதம். எனது மொழி இந்திய மொழி. எனது மக்கள் இந்தியர்கள்.ஆனால் இவ்விடையைக் கண்டு என் மனம் என்றுமே திருப்தி அடைந்ததில்லை. நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எப்படி வந்தோம்? நாம் பேசும் மொழியான ஸெளராஷ்ட்ரம் எத்தகையது? நமது கலாச்சாரம் எப்படி? என்று சிந்திப்பதிலேயே என் வாழ்நாளில் பாதி கழிந்து விட்டதே தவிர விடை இன்னும் கிடைக்கவில்லை! ஸெளராஷ்ட்ர இலக்கியங்கள் பலவற்றை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். ஸெளராஷ்ட்ர தேசத்தைச் சிலமுறை என் அலுவல் காரணமாகச் சென்றிருந்த பொழுது சுற்றிப் பார்த்திருக்கிறேன். கண்ணுக்கினிய கடற்கரையையும், பழம் பெரும் கோவில்களையும், கோட்டைகளையும் வலம் வந்துள்ளேன், ஸெளராஷ்ட்ர கிராமத்து மக்களைக் கண்டு நம் ஸௌராஷ்ட்ர மொழியில் பேச முனைந்து, மொழி புரியாது பரிகசிக்கப் பட்டிருக்கிறேன். இத்தனை அனுபவங்களுக்குப் பின் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. இப்பொழுதுள்ள ஸெளராஷ்ட்ரத்திற்கும் நாம் வாழ்ந்த அந்நாளைய ஸெளராஷ்ட்ரத்திற்கும் பெருமளவில் மாற்றம் காணப்படுகிறது. இது ஏனென்றால் அந்நாளைய ஸெளராஷ்ட்ர மக்கள் சரித்திர மாறுபாட்டின் காரணமாக இன்று அங்கு காணப்படவில்லை மாறாக, “ரபாரிமொழி பேசும் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இன்று அங்கு வாழ்ந்து வரும் மக்கள் பெருவாரியாக அண்டை மாகாணமான ராஜஸ்தானிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ளவர்கள் என்று தெரிகிறது. அநேகமாக இவர்கள் ஜைன மதத்தில் நாட்டங்கொண்டு ஜைனர்களாகவே இருந்து வருகிறார்கள். மொகலாய ஊடுருவல் காரணமாக இந்துக்கள் பெருமளவில் ஸௌராஷ்ட்ர தேசத்திலிருந்து வெளியேறினர். கொஞ் நஞ்சமிருந்த ஹிந்துக்கள் முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர். இஸ்லாமிய மதம் வேறூன்றியது. பின்னர் ஜைன மதம் தழைத்தோங்க ஆரம்பித்த காலத்தில் ராஜஸ்தானிலிருந்து ஜைனர்கள் வடகுஜராத்தின் பல பகுதிகளுக்கு வந்து தங்க, ஜைன மதம் செழிப்புற ஆரம்பித்தது. பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியிலுள்ள (கட்ச் பகுதியின் ரண்) ஒரு குக்கிராமமமான 'பன்னி' என்ற கிராமத்திற்க்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கிராமம் சாலை வசதியில்லாது மிகவும் உள்ளே தள்ளியிருக்கிறது. இங்குள்ள குடும்பங்கள் மொத்தம் எழுபத்தைந்தே. மக்கள் மொத்தமும் முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவர்கள், வெளியுலகை அதிகமாக அறியாத இவர்களின் தொழில் பசுமாடு வளர்த்தல், கைநெசவு மற்றும் பூ(பு3ட்டா) வேலை செய்வதில் பெண்டிர் விளங்குகிறார்கள். கிராமத்தைச் சுற்றியுள்ள வறண்ட பரப்பில் ஆளுயர கோரைப்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. பசுதான் இம்மக்களுக்கு தெய்வம். பசுதான் இம்மக்களுக்கு வாழ்வு. முஸ்லீம் வகுப்பினரில் மாமிசம் உண்ணாதவர்கள் பார்த்திருக்கிறீர்களா? பன்னி கிராம மக்கள் புலாலை சாப்பிட எண்ணுவது கூட பாவம் என்று நம்புகிறார்கள். அக்கிராமத் தலைவரிடமிருந்து இதைக் கேட்ட எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 'கோமாதா' பேச்சளவில் இல்லாது இம்மக்களின் தாயாகவே இருந்து வருகிறது. இவைகளையெல்லாம் பார்த்த, கேட்ட எனக்கு இம்மக்கள் தாம் ‘மதம் மாற்றப்பட்ட பழைய ஸெளராஷ்ட்ர மக்களோஎன்று ஒரு கணம் எண்ணத் தோன்றியது. இக்கிராமப் பெண்டிரின் பூப்போடும் அழகும், 'பு3ட்டா' போடும் நேர்த்தியும்' நம் ஸௌராஷ்ட்ர மக்களயே நினைவுறுத்தியது. பசுமாடு வளர்த்து அதிலிருந்து வரும் வருவாயில். பிழைக்கும் மக்களை ஸெளராஷ்ட்ர தேசம் முழுவதும் இன்றும் காணலாம்.

'தக்ஷணின் 27 புத்திரிகளையும் சந்திரன் மணம் புரிந்து கொண்டார். தம் மனைவிமார்கள் அனைவரிலும் ரோகிணி என்பவளிடம் அதிகமாகக் காதல் கொண்டு பிறமனைவியரைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றங்கொண்ட பெண்மக்கள் தம் தந்தையான தக்ஷணிடம் தம் குறையைச் சொல்லி முறையிட்டனர். இதனால் தஷண் சினம் கொண்டு சந்திரனுக்கு க்ஷயரோகம் உண்டாகும்படி சபித்து விட்டார். சந்திரன் க்ஷயரோகத்தினால் சிறுகச் சிறுகத் தேய ஆரம்பித்தான். மூவுலகிலும் ஒளி குன்றி இருள் சூழ ஆரம்பித்தது. இதைக் கண்டு கவலையுற்ற தேவர்கள் தக்ஷணிடம் சென்று சந்திரனை மன்னித்து, உலகை இருளினின்றும் காத்திட வேண்டினர். ஸரஸ்வதி நதி சங்கமமாகும் சமுத்திர முகப்பில் குளித்து அங்கு எழுந்தருளியிருக்கும் "ஸோமநாதரை தரிசித்து ஆலயத்தில் யாகம் செய்து பிராமணர்களுக்கு விசேஷ தானங்கள் புரிந்தால் சந்திரனுக்கு க்ஷய வியாதி தீருமென்று சொல்லியருள, அவ்வாறே சந்திரன் ஸெளராஷ்ட்ர பிராமணர்களை அழைத்து யாகம் செய்து, தம்மைப் பீடித்திருக்கும் க்ஷய ரோகத்திலிருந்து விடுபட்டு, மனம் குளிரிந்து ஸெளராஷ்ட்ர பிராமணர்களுக்கு ஸோமபுரியையும், மதிப்பற்ற விலை மதிப்பற்ற வைர வைடூரியங்களையும் தானங் கொடுத்தார். இப்பிராமணர்கள் ஸௌராஷ்ட்ர தேசத்திலுள்ள ஸோமபுரியில் தங்கி ஸோமநாதரை தரிசித்து வாழ்ந்து வரலாயினர். மதுரையிலுள்ள ஸௌராஷ்ட்ர ஸமூஹ மக்கள் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரை மெய்மறந்து தரிசிக்கும் காட்சியைக் காணுந்தோறும் இக்கூற்று உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது.


முகம்மதிய ஊடுறுவல் காரணமாக தங்கள் தேசமான ஸெளராஷ்ட்ர தேசத்தை விட்டு வெளியேறி யாதவர் தலைநகரான தேவகிரிக்கு வந்து, (A.D.1187-8) பின்னர் அங்கிருந்து விஜயநகரத்துக்கு
(A.D.1316) குடிபெயர்ந்தனர். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் (A.D.1565) பின்னர் அழைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சியின் குடையின் கீழ் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக மதுரை,திண்டுக்கல்,தஞ்சாவூர் போன்ற நகரங்களில் சிறப்புற வாழ்ந்து வரலாயினர். டாக்டர் ராண்டேல் அவர்களின் 'தென்னிந்திய ஸெளராஷ்ட்ரர்' என்ற புத்தகத்திலிருந்து கிடைக்கும் சுருக்கமான தகவல் இது. இன்று மஹாராஷ்ட்ர மாகாணத்தில் நாகபுரி போன்ற நகரங்களில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆராயும்போது ஸெளராஷ்ட்ர மக்கள் யாதவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்திருந்த பொழுது மஹாராஷ்ட்ர மக்களின் வாழ்க்கையையும் மொழியையும் தம்முடன் கலந்து விட்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. பொதுவாக நம் குலப்பெண்டிரின் உடை அலங்காரம் மஹாராஷ்ட்ர பெண்டிரைப் போன்றே அமைந்திருக்கிறது. நம்மவரைப் போன்றேபொண்ணி-தனி' போன்ற நெசவு சம்பந்தமான பணிகளை அதிகாலையிலேயே செய்யும் அழகைப் பார்த்தால் நம் மக்கள் எவ்வளவு தூரம் இம்மஹாராஷ்ட்ர மக்களை ஒத்திருக்கிறார்கள் என்பதை அறியலாம். நம் பெண்டிரின் நடை,உடை,அலங்காரம் தெலுங்கு நாட்டிலிருந்தும் பின்பற்றியிருக்கக் கூடும். யாதவ சாம்ராஜ்யத்திலிருந்து தெலுங்கு நாட்டில் பலகாலம் நம்மவர்களின் ஒரு பகுதியினர் வாழ்ந்திருந்ததால் தெலுங்கர்களின் வாழ்க்கை முறையையும் கடைப் பிடித்திருக்கலாம். ஸெளராஷ்ட்ர மக்கள் பல நூறு ஆண்டுகளாக பாரத நாட்டின் ஒரு கோடியான ஸெளராஷ்ட்ரத்திலிருந்து மறுகோடியான கன்யாகுமரி வரை பல மன்னர்களின் பேராட்சியில் சிற்சில காலங்கள் சிறப்புடனும் மதிப்புடனும் வாழ்ந்திருந்து இன்று பெருவாரியாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். அப்படி பல குடைகளின் கீழ் செல்வாக்குடன் வாழ்ந்திருந்த காரணங்களால் அந்தந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் ஒன்றிணைந்து அவர் தம் நடை,உடை பாவனைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கலாம். இத்தனை சரித்திர மாறுபாட்டுக்குப் பின்னும் ஸெளராஷ்ட்ர மக்கள் தம் ஒருமைப் பாட்டையும் மொழியையும் கட்டிக் காத்து கடைப்பிடித்து வந்திருப்பது அந்த குலத்துக்கே பெருமை தரும் சரித்திரச் சான்றாகும்.

ஸெளராஷ்ட்ர மொழி நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகப் பல மொழிகளுடன் கலந்து உறவாடியிருப்பினும், தன் தனித்தன்மை மாறாது பல மொழிகளின் சேர்க்கையால், இன்று குஜராத்தி,மராத்தி,ராஜஸ்தானி,ஒரியா,கன்னடம்,தெலுங்கு,தமிழ் மொழிகளை அணைத்துக் கொண்டு இனித்து மதுரமாக ஒலிக்கிறது. இம் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணங்களில் பயணம் செய்து அவர்களுடன் பழகியிருப்பதால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. ஸெளராஷ்ட்ர மொழியானது ஸெளரஸேனி ஸெளராஷ்ட்ரி மொழிகளின் மருவு. ஸெளராஷ்ட்ரி, ஸெளரஸேனி ஸமஸ்கிருதத்திலிருந்து உண்டான பிராகிருத மொழிகள், அர்தப்ராகிருதம், ஸௌரஸேனி,ப்ராக்ருதி,மாகதி,பைசாசி,சூலிகா பைசாசி,அபப்ரம்ஸி ஆகியவைகளில் ஒன்று. பின்னர் தோன்றிய குஜராத்தி மொழி இந்த ஸௌரஸேனி-ஸௌராஷ்ட்ரீ இவைகளின் கூட்டுச்சேர்க்கையே (Encyclo Paedia Britanica (12) P710). இவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஸெளராஷ்ட்ர மொழியினை, தாய்மொழியினை, தலை நிமிர்த்தி, ஸெளராஷ்ட்ரத்தாயை மீண்டும் அரியணை ஏற்றிடும் முயற்சியில் ஸமூஹப் பிரமுகர்களும் ஆர்வமிக்க இளந் தளிர்களும் ஒன்று திரண்டு இன்று செயல்பட்டு வருகிறார்கள். ஸௌராஷ்ட்ர மொழியும் அதன் இலக்கியம் மீண்டும் உலகில் தம் பழம் புகழையும்,பெருமையையும் நிலைநாட்டும் காலம் அதிக தூரத்தில் இல்லை. வாழ்க பாரதம்! வளர்க ஸெளராஷ்ட்ர மொழி! மொழி வளர்ச்சிப்பணி புரிந்து கொண்டு வருகின்றவர்களை வணங்குகிறேன்.

ராஜேந்திர மார்கண்டே - பம்பாய்
------------------------------------------------------------
இக்கட்டுரை 1976 ம் ஆண்டு பா4ஷாபி4மானி இதழில் வெளியானது. இதை முறையாக சேகரித்து, ஸ்ரீமான் கொண்டா.K.S.செந்தில்குமார் மதுரை அவர்களால் Sourashtra Library எனும் வலைதளத்தில் பதிவிடப்படுகிறது.

நன்றி : பா4ஷாபி4மானி ஆசிரியர் ஸ்ரீமான் தொ3ப்பென்.T.V.குபேந்திரன் மதுரை.

புகைப்பட உதவி : Avre Thinnal 2017 Team
(North American Sourashtra Convention 2017).


Comments

Anonymous said…
Chokat se dhathanu

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி